ADDED : மார் 21, 2024 10:15 AM
திருவள்ளூர்:தமிழகம் - ஆந்திர மாநில சோதனை சாவடி வழியாக, மதுபானம் கடத்தப்படுவதை தவிர்க்க, இருமாநில கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக - ஆந்திர எல்லையில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள்; ஆந்திர மாநிலம் திருப்பதி கலெக்டர் லட்சுமி ஷா, எஸ்.பி., கிருஷ்ண காந்த், சித்துார் கலெக்டர் ஷான் மோகன் சாகிலி, எஸ்.பி., ஜோஸ்வா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து சட்ட விரோத மதுபான விற்பனை தடை செய்ய வேண்டும். திருவள்ளூர் - ஆந்திர மாநில எல்லையில் உள்ள, எளாவூர், பொம்மாஜிகுளம், நாகலாபுரம் , பொன்பாடி, தேவலாம்பாபுரம் சோதனை சாவடி வழியாக, சட்ட விரோத மதுபான விற்பனையை தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, உதவி பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வதஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

