/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டும், குழியுமான பெரியபாளையம் --சாலை
/
குண்டும், குழியுமான பெரியபாளையம் --சாலை
ADDED : ஆக 02, 2024 03:00 AM

ஊத்துக்கோட்டை:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பெரியபாளையம் --- - ஊத்துக்கோட்டை இடையே, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், சூளைமேனி, தண்டலம், பாலவாக்கம், தாராட்சி உள்ளிட்ட முக்கிய கிராமங்கள் உள்ளன.
இந்த சாலையில் இருந்து இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலையை பயன்படுத்துகின்றன. குறிப்பாக, சூளைமேனி அடுத்த தேர்வாய் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து தினமும், 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையில் மரண பயத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஏதாவது ஒரு பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். தற்போது பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செல்லும் பக்தர்கள் குண்டும், குழியுமான சாலையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பெரிய பாளையம் சாலையை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.