/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண்டல ஹாக்கியில் சென்னை அணி 'சாம்பியன்'
/
மண்டல ஹாக்கியில் சென்னை அணி 'சாம்பியன்'
ADDED : ஜூலை 21, 2024 06:55 AM
சென்னை: தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், டி.எஸ்.எச்.எல்., எனும் தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் போட்டிகள், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன. மொத்தம் 50க்கு மேற்பட்ட அரசு பள்ளிகள் உட்பட 306 பள்ளிகள் பங்கேற்றன.
முதற்கட்டமாக கடந்த 6, 7ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற அணிகள், ஏழு மாவட்டங்கள், ஒரு மண்டலமாக இணைந்து, மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி, சென்னை மண்டல அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டங்கள், கடந்த மூன்று நாட்கள், சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்தன.
இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்கள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகளின் முடிவில், நேற்று மதியம் நடந்த முதல் அரையிறுதியில், சென்னை - ராணிப்பேட்டை அணிகள் மோதின. அதில், 6 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், திருவண்ணாமலை அணி, 3 - 1 என்ற கணக்கில், செங்கல்பட்டு அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மாலையில் நடந்த இறுதிப் போட்டியில், சென்னை மற்றும் திருவண்ணாமலை அணிகள் மோதின.
விறுவிறுப்பான போட்டியின் முடிவில், 2 - 0 என்ற கணக்கில், சென்னை அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது. செயின்ட் பால்ஸ் பள்ளி அணி, சென்னை அணியாக களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், ராணிப்பேட்டை அணி, 3 - 1 என்ற கணக்கில் செங்கல்பட்டு அணியை வீழ்த்தி கைப்பற்றியது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஐ.ஓ.பி., வங்கியின் டி.ஜி.எம்., திருமுருகன், ஹாக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.