
கழிவுநீரில் கால்வாய்
அமைக்கும் பணிகள்
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது கவரைப்பேட்டை. அங்குள்ள பழவேற்காடு தெருவில் கால்வாய் துார்ந்து போனதால், சாலையோரம் திறந்தவெளியில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
அந்த தெருவில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகளை ஒன்றிய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. துார்ந்து போன கால்வாயில் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றாமல், அப்படியே கழிவுநீரில் கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தரமற்ற கால்வாயை கடமைக்கு நிறுவி வரும் பணிகளை உடனடியாக நிறுத்தி, கழிவுநீரை அகற்றிய பின் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.வெங்கடகிருஷ்ணன்,
கவரைப்பேட்டை.
பயணியர் நிழற்குடை
வேண்பாக்கத்தில் அமையுமா?
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் உள்ள வேண்பாக்கம் பகுதியில், நிழற்குடை வசதி இல்லை. இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணியர் மற்றும் பள்ளி மாணவியர் வெயிலில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இங்கு, பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளது. அரசு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியும், அங்குள்ள மேரி மாதா சிலை அருகில் என, இருபுறமும் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ஜி. கிருஷ்ணா,
பொன்னேரி.

