ADDED : மே 16, 2024 12:56 AM

திருவள்ளூர்:ஆந்திர மாநிலத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்திருப்பதால், தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி கொசஸ்தலை ஆற்றின் அருகில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்க முடியும். இங்கு, மழை காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கால்வாய் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, பூண்டி நீர்த்தேக்கத்தில், 0.75 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
இதனால், ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்ட்'ல் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை, ஆங்காங்கே கால்வாய் சேதமடைந்து உள்ளது.
கால்வாயில் அமைக்கப்பட்ட 'சிமென்ட் சிலாப்' உடைந்து விட்டதால், தண்ணீர் விரயமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, மழை காலத்திற்குள் பொதுப்பணித்துறை - நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.