/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் துரியோதனன் படுகளம்
/
திருத்தணி கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : மே 12, 2024 09:33 PM

திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான தீமிதி விழா கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபேிஷகம், மதியம் மகா பாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது. கடந்த 1ம் தேதி திரவுபதியம்மன் திருமணம், 3ம் தேதி சுபத்திரை திருமணம், 7ம் தேதி அர்ஜூனன் தபசு நடந்தது.
நேற்று காலை, 8:45 மணியளவில் கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர்.
மாலை, 6:00 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 5 பக்தர்கள் தீ காயம் அடைந்தனர்.
இரவு, வாணவேடிக்கை மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.
l ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தில் திரவுபதியம்மன் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
கடந்த 18 நாட்களாக நடந்து திருவிழாவில், பகாசூரன் கும்பம், அர்ச்சுணன் தபசு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடந்தன.நேற்று காலை 10:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட களிமண் சிலையை ஒட்டி, தெருக்கூத்து கலைஞர்கள் படுகளம் நிகழ்ச்சி நடத்தினர்.
தொடர்ந்து சபதம் நிறைவேற்றிய திரவுபதியம்மன், தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். உடன் காப்புகட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்களும் வலம் வந்தனர். மாலை 6:00 மணிக்கு, திரவுபதியம்மன் அக்னி குண்டத்தில் இறங்கினார். இன்று காலை தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.