
பொன்னேரி: பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து, செங்குன்றம், பழவேற்காடு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்த்தின் நீண்டதுார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அண்ணாமலைச்சேரி, கள்ளூர், திருவெள்ளவாயல், தத்தமஞ்சி, கடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தகரடப்பாக்களாக உள்ளன. இவை அவ்வப்போது பழுதாகி நிற்கின்றன. பொன்னேரி - மீஞ்சூர் இடையே டி-40 பேருந்து, இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, இந்த பேருந்து தத்தமஞ்சி சென்றுவிட்டு, பொன்னேரி திரும்பும்போது பழுதாகி நின்றது. பயணியரை கொண்டு பேருந்தை தள்ள முயன்று முடியாத நிலை ஏற்பட்டது.
அதையடுத்து பயணியர் பேருந்தை தள்ளும் முயற்சியை கைவிட்டு, பொன்னேரி பேருந்து நிலையம் சிறிது துாரத்திலேயே இருந்ததால், நடந்தே சென்றுவிட்டனர். பணிமனை ஊழியர்கள் வந்து பழுதான பேருந்தை சரிசெய்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கினறனர்.

