/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
/
ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
ADDED : மே 25, 2024 11:11 PM
அரக்கோணம்:திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பெருமாள் நகரை சேர்ந்த முத்துக்குமாரின் மனைவி அபிராமி, 41. இவர் கடந்த 12ம் தேதி சென்னை ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றார். பின் அங்கிருந்து இரவு சென்னை செல்லும் புறநகர் ரயிலில் ஆவடிக்கு சென்றார்.
ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்குள் வருவதற்கு முன் சிக்னலுக்காக நின்றது. அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த அபிராமி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பினார்.
அபிராமி அளித்த புகாரின்படி அரக்கோணம் ரயில்வே போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அரக்கோணம் ரயில் நிலையம் 4-வது நடைமேடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ், 35. ஆட்டோ டிரைவர் என்பதும் ரயிலில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 11 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.