/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆன்லைன் கட்டட அனுமதி கட்டாயமாக்கி உத்தரவு
/
ஆன்லைன் கட்டட அனுமதி கட்டாயமாக்கி உத்தரவு
ADDED : செப் 09, 2024 06:44 AM
சென்னை: சென்னை பெருநகர் பகுதிகளிலுள்ள ஊராட்சிகளில் புதிய கட்டட அனுமதி பெற, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர் பகுதியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் சி.எம்.டி.ஏ.,வின் அதிகாரப் பகிர்வு அடிப்படையில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் மாநகராட்சி, நகராட்சிகளில் தனித்தனி இணையதளங்கள் வாயிலாக, கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கட்டட அனுமதி தொடர்பான அனைத்து இணையதளங்களுக்கும் மாற்றாக, ஒற்றைச் சாளர முறை உருவாக்கப்பட்டது.
இதற்கான ஒருங்கிணைந்த புதிய இணையதளம் ஏற்படுத்தப்பட்டது.
இதில், ஊரக வளர்ச்சித் துறை வழிகாட்டுதல் அடிப்படையில், ஊராட்சி பகுதிகளில் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம், சில மாதங்களுக்கு முன் அமலுக்கு வந்தது.
ஆனால், சென்னை பெருநகர் பகுதியிலுள்ள, 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஒற்றைச் சாளர முறை முழுமையாக அமலுக்கு வராமல் இருந்தது.
தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் இதற்கான வசதி விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஊராட்சி பகுதிகள் தொடர்பான கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்களை, ஒற்றைச் சாளர முறை இணையதளம் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
கட்டுமான பொறியாளர்கள், கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் உள்ளிட்ட அனைவரும், இதை கடைபிடிக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.