/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் போடப்பட்டுள்ள பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்
/
கிடப்பில் போடப்பட்டுள்ள பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்
கிடப்பில் போடப்பட்டுள்ள பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்
கிடப்பில் போடப்பட்டுள்ள பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்
ADDED : ஏப் 27, 2024 12:25 AM

கடம்பத்துார்:பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளாததால், 50க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பேரம்பாக்கத்தில் இருந்து 20 கி.மீ., துாரத்திற்கு அரசு மருத்துவமனை இல்லாததால் பேரம்பாக்கத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில், 30 படுக்கைகள் உள்ளன. இங்கு, ஐந்து மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
பேரம்பாக்கத்தைச் சுற்றியுள்ள, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும், 500 முதல், ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
உள்நோயாளிகளாக, 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் இம்மருத்துவமனையில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல் மருத்துவம், குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், எக்ஸ்-ரே மற்றும் உள் நோயாளிகள் பிரிவு என, அனைத்து பிரிவுகளும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, 30 நோயாளிகள் மட்டும் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வகையில், படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் அடைகின்றனர்.
அதற்கு மேல் வரும் நோயாளிகள், மருத்துவமனை வரண்டாவில் உள்ள சிமென்ட் இருக்கைகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கும் அறை பழுதடைந்து உள்ளதால் மருத்துவமனை நுழைவுவாயில் சேர், டேபிள் போட்டு திறந்தவெளியில் டோக்கன் வழங்கி வருகின்றனர்.
சிறிய அறையில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை இயங்கி வருவதால் வரிசையில் நின்று கொண்டே தான், ஒருவர் பின் ஒருவராக சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.
பேரம்பாக்கம் மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரி பலமுறை மருத்துவத்துறை அதிகாரிகள் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2023ம் ஆண்டு சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.
அப்போது குழுவினரிடம் பகுதிவாசிகள் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருவதோடு மருத்துவமனை மிகவும் பழுதடைந்த குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. மேலும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இதைகேட்ட குழு தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். முதலில் மருத்துவமனை சுற்று சுவர் அமைக்கப்படும். பின் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் பேரம்பாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

