/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமான குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை
/
சேதமான குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை
ADDED : செப் 09, 2024 07:05 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது ராமாபுரம் கிராமம். இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிவாசிகளின் பயன்பாட்டிற்காக அரசு துவக்கப்பள்ளி எதிரே, 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இந்தமேல்நிலை நீர்த்தேக்கதொட்டி 4 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் உள்ளது. இதன் நான்கு துாண்களும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளது.
பள்ளி எதிரே உள்ள குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து, சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்வதால், குழந்தைகள் அந்த பகுதிக்கு செல்லும் போது காயமடைய வாய்ப்பு உள்ளதால் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
மேலும் வி.ஏ.ஓ., அலுவலகம், பஞ்., அலுவலகம், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம், பயணியர் நிழற்குடை சுற்றி அமைந்துள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
பழுதான தொட்டியை அகற்ற ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ராமாபுரத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு சில தினங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பின் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.