/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவி பலாத்காரம் கேரள வாலிபர் கைது
/
மாணவி பலாத்காரம் கேரள வாலிபர் கைது
ADDED : ஜூலை 27, 2024 07:15 AM

சென்னை : விருகம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, கேரளாவைச் சேர்ந்த 22 வயது பெண் தங்கி, கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார்.
அந்த வீட்டின் அருகே, சினிமா தொடர்பான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நந்துலால், 23, என்பவர் பணிபுகிறார். ஒரே மாநிலத்தவர்கள் என்பதால், இருவரிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி, மாணவி தனியாக இருப்பதை அறிந்து, அதிகாலை 5:30 மணியளவில் வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
இதில், சம்பவம் நடந்த அன்றைய தினம் வாலிபர் தலைமறைவானது தெரிய வந்தது. மேலும், அவர் சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு தனிப்படை போலீசார் முகாமிட்டு நந்துலாலை கைது செய்து, கேரள மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அங்கிருந்து அழைத்து வந்து சென்னை புழல் சிறையில் நேற்று முன் தினம் அடைத்துள்ளனர்.
மிரட்டல்
சாலிகிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கோயம்பேடில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மாணவிக்கு 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளம் வாயிலாக பழக்கமானவர், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துவெளியிடப் போவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போய் மாணவி தற்கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.