ADDED : பிப் 26, 2025 07:04 PM
சோழவரம்:சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன், 31. இவர், சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரோடு ரோலர், மூன்று தினங்களுக்கு முன், மீஞ்சூர் பகுதியில் சாலை பணிகளுக்கு கொண்டு வரப்பட்டது. பணிகள் முடிந்து, வாகனத்தை சென்னைக்கு கொண்டு செல்லும்போது பழுதானது.
அதையடுத்து அதன் டிரைவர், சோழவரம் அடுத்த, நல்லுார் டோல்கேட் பகுதியில் ரோடு ரோலர் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
கடந்த 24ம் தேதி மாலை, வாகனத்தை சரி செய்து கொண்டு செல்வதற்காக தினகரன், டிரைவர் மற்றும் மெக்கானிக்குடன் வந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரை காணவில்லை.
இது குறித்து சோழவரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்படி, சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், 34, கோபிநாத், 52, வெங்கடேசன், 34, ஆகியோர், 'எய்ச்சர்' லாரியில் வைத்து, ரோடு ரோலரை திருடி சென்றது தெரிந்தது. அதையடுத்து போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.
