/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அணைக்கட்டு பகுதியில் முட்புதர் அகற்றப்படுமா?
/
அணைக்கட்டு பகுதியில் முட்புதர் அகற்றப்படுமா?
ADDED : ஜூலை 23, 2024 01:01 AM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. மழைக்காலங்களில் இங்கு தேக்கி வைக்கப்படும் மழைநீர், அங்குள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கால்வாய் வழியாக பெரும்பேடு, தத்தமஞ்சி, வேலுார், காட்டூர் ஆகிய ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக அணைக்கட்டின் இருபுறமும், ஆறு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. ஆற்று கரைகளில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் கரணமாக ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வறண்டு கிடந்த அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், அணைக்கட்டு பகுதி முழுதும் முள்செடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மழைநீர் செல்லும் கால்வாயின் சரிவுபகுதி, அணைக்கட்டில் தேங்கும் தண்ணீரை கணக்கிடும் கண்காணிப்பு கோபுரம் ஆகிய பகுதிகளிலும் முள்செடிகள் சூழ்ந்து உள்ளன. மதகுகள் துருப்பிடித்து வருகின்றன.
வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அணைக்கட்டு பகுதியை முழுமையாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள், கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.