ADDED : அக் 15, 2024 07:50 PM
வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நேற்றும், இன்றும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை, பலத்த மழை பெய்தது. காற்று வீசாமல், நிதானமாக கொட்டித் தீர்த்த மழையால், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊதுக்கோட்டை, பழவேற்காடு, கடம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக, கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீ., மழை பதிவாகியது. பிற பகுதிகளிலும், நேற்று இரவு வரை பலத்த மழை பெய்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காட்சியளித்தது. தொடர் மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், கண்ணன் கோட்டை உள்ளிட்ட நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு:
இடம்-மழையளவு(செ.மீட்டரில்)
கும்மிடிப்பூண்டி-10.3
பொன்னேரி-9.00
தாமரைப்பாக்கம்-5.6
ஊத்துகோட்டை-4.7
பூண்டி-4.5
சோழவரம்-3.8
திருவள்ளூர்-3.6
செங்குன்றம்-3.1
திருத்தணி-3.0
ஆவடி-2.7
திருவாலங்காடு-2.1
பள்ளிப்பட்டு-2.0
ஆர்.கே.பேட்டை-2.0
பூந்தமல்லி-2.0