/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்துணவு கூடங்களில் 13 கல்வி அலுவலகங்கள்...அவலம்! :பள்ளிகளின் செயல்பாடு கண்காணிப்பதில் சிக்கல்
/
சத்துணவு கூடங்களில் 13 கல்வி அலுவலகங்கள்...அவலம்! :பள்ளிகளின் செயல்பாடு கண்காணிப்பதில் சிக்கல்
சத்துணவு கூடங்களில் 13 கல்வி அலுவலகங்கள்...அவலம்! :பள்ளிகளின் செயல்பாடு கண்காணிப்பதில் சிக்கல்
சத்துணவு கூடங்களில் 13 கல்வி அலுவலகங்கள்...அவலம்! :பள்ளிகளின் செயல்பாடு கண்காணிப்பதில் சிக்கல்
ADDED : ஜன 31, 2025 09:20 PM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், 13 வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாததால், வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவை பள்ளிகளின் சத்துணவு கூடங்களிலும் வாடகை கட்டடங்களிலும் இயங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 14 ஒன்றியங்கள் உள்ளன. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நிலவரம், மாணவர்களுக்கு வழங்கும் நலதிட்ட உதவிகளை கொண்டு சேர்க்க, ஒன்றியத்திற்கு ஒரு வட்டார கல்வி அலுவலகம் வீதம், 14 அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், பூந்தமல்லி ஒன்றியத்தில் மட்டும், வட்டார கல்வி அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் உள்ளது.
மீதமுள்ள, 13 கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாமல், அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகம், உணவு கூடங்கள் மற்றும் திறன் வளர்ச்சி பள்ளிகளில், தற்போது வரை இயங்கி வருகின்றன.
வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளி ஆய்வகம் மற்றும் உணவு கூடங்களில் இயங்கி வருவதால், மாணவர்கள் செய்முறை சோதனைகள் செய்ய முடிவதில்லை.
மேலும், மதிய உணவு பொருட்கள் வைப்பதற்கும், சமைப்பதற்கும் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளி வளாகங்களில் இயங்கி வரும், அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது சொந்த கட்டடம் கட்டித் தரவேண்டும் என, கடந்தாண்டு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இருப்பினும், தற்போது வரை திருத்தணி, எல்லாபுரம் மற்றும் புழல் ஆகிய வட்டார கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் இயங்கி வருகின்றன.
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கடம்பத்துார் உட்பட, 10 ஒன்றியங்களில், பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் இயங்கி வருகின்றன.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகங்களை, வாடகை கட்டடம் அல்லது அரசு துறைக்கு சொந்தமான கட்டடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதிலும், அரசு நலத்திட்ட உதவிகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கலெக்டர் உடனடியாக தலையிட்டு, வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் அல்லது வாடகை கட்டடம் ஏற்படுத்தி தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.