ADDED : மே 20, 2025 12:17 AM
சென்னை, சென்னை, துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெபசிங், 58. இவர், நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
கந்தன்சாவடியில் உள்ள 'டாஸ்மாக்' கடை அருகில் மூன்று பேர் மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை, அங்கிருந்து செல்ல ஜெபசிங் எச்சரித்துள்ளார். உடனே, திமிராக பேசிய அவர்கள், இங்கிருந்து செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர். அருகில் சென்ற ஜெபசிங், அவர்களிடம் விசாரிக்க முயன்றார். அப்போது, மூன்று பேரும் சேர்ந்து, ஜெபசிங்கின் கன்னம், கையில் சரமாரியாக தாக்கினர்.
தகவலறிந்த சக போலீசார் வந்து, ஜெபசிங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் கொட்டிவாக்கம், இளங்கோ நகரைச் சேர்ந்த விஜய், 28, சதீஷ், 33, ரஞ்சித், 36, என தெரிந்தது. மூன்று பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
