/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 நெடுஞ்சாலைகளில் 37 வளைவுகள் அபாயம்!:விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
3 நெடுஞ்சாலைகளில் 37 வளைவுகள் அபாயம்!:விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
3 நெடுஞ்சாலைகளில் 37 வளைவுகள் அபாயம்!:விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
3 நெடுஞ்சாலைகளில் 37 வளைவுகள் அபாயம்!:விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 31, 2024 11:41 PM

திருவாலங்காடு:திருவாலங்காடில், தக்கோலம், திருவள்ளூர், பேரம்பாக்கம் ஆகிய மூன்று நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலைகளில், 37 இடங்களில் வளைவுகள் உள்ளன. எட்டு இடங்களில் குண்டூசி வளைவுகளும், தடுப்புகள் இன்றியும், சாலையின் இருபுறமும் பள்ளமும் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வழியாக திருவள்ளூர்- அரக்கோணம், தக்கோலம்- கனகம்மாசத்திரம், திருவாலங்காடு,- பேரம்பாக்கம் நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த மூன்று நெடுஞ்சாலைகள் திருவாலங்காடின் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாகவே காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், திருத்தணி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், 18 கி.மீ., துாரம் கொண்ட தக்கோலம் - - கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையில் முத்துக்கொண்டாபுரம், அத்திப்பட்டு, கூர்மவிலாசபுரம், சின்னம்மாபேட்டை, சின்னகளக்காட்டூர், பெரியகளக்காட்டூர் என மொத்தம், 16 இடங்களில் வளைவுகள் உள்ளன.
குண்டூசி வளைவுகள்
அதேபோல், 30 கி.மீ., துாரம் கொண்ட அரக்கோணம் - - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நாராயணபுரம், வரதாபுரம், மஞ்சாகுப்பம், கூடல்வாடி, திருவாலங்காடு, வீரராகவபுரம், வியாசபுரம் உள்ளிட்ட, 11 இடங்களில் வளைவுகள் உள்ளன.
மேலும், 10 கி.மீ., துாரம் கொண்ட திருவாலங்காடு -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பழையனுார், ராஜபத்மாபுரம், மணவூர், பொன்னாங்குளம், பாகசாலை, களாம்பாக்கம் உட்பட, 10 இடங்களில் வளைவுகள் உள்ளன.
இந்த பகுதிகளில் முத்துக்கொண்டாபுரம், சின்னம்மாபேட்டை, பாகசாலை, களாம்பாக்கம், வீரராகவபுரம் உட்பட, எட்டு இடங்களில் குண்டூசி வளைவுகள் காணப்படுகின்றன. இங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கனகம்மாசத்திரத்தை சேர்ந்த வாசுதேவன், 44, கூறியதாவது:
இருபது ஆண்டுகளாக திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு தக்கோலம் நெடுஞ்சாலையில் சென்று வருகிறேன். முத்துக்கொண்டாபுரம் பகுதியில் இந்த சாலை 'எஸ்' வடிவில் வளைந்து வளைந்து செல்கிறது.
வாகனங்கள் இந்த பகுதியை கடக்கும்போது தடுமாற்றத்துடன் செல்கின்றன. இரவு நேரங்களில் சாலை வளைவுகளில் திரும்பும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில் தடுப்போ, 'ரிப்ளக்டரோ' இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலையோர பள்ளம்
மணவூரைச் சேர்ந்த எல்.கணேசன், 50, கூறியதாவது:
பேரம்பாக்கம் சாலையில் மணவூர் - எல்.வி.புரம் பகுதியில் சாலையின் இருபுறமும், 4 அடி வரை பள்ளமாக உள்ளது.
வளைவுகளில் மிதவேகத்தில் சென்றாலும் திரும்பும்போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் சாலையோர தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது.
வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி அசம்பாவிதங்கள் நேரிடுவது வழக்காமாகி உள்ளது. எனவே, வளைவு பகுதியில் தேவையான, பாதுகாப்பு நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.