50 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு! கலெக்டர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
50 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு! கலெக்டர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
UPDATED : செப் 12, 2026 09:04 PM
ADDED : செப் 12, 2026 08:44 PM

திருவள்ளூர்: ''திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு சொர்ணவாரி பருவத்திற்கு 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இந்நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவம் 2026 - 27ல், நெல் அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக, மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 வட்டாரங்களில் எல்லாபுரம், கடம்பத்துார் உட்பட 50 இடங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள், இன்று திறக்கப்பட உள்ளன.
இரண்டாம் கட்டமாக, 20 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் மூட்டைக்கு லஞ்ச பணம் வாங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை, மண்டல மேலாளர் - 94446 62984, துணை மண்டல மேலாளர் - 95142 65373, துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு - 96262 82345 மற்றும் துணை மேலாளர் - 99527 79614 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
