/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் விடுதியில் தவறவிட்ட 7 சவரன் நகை ஒப்படைப்பு
/
கோவில் விடுதியில் தவறவிட்ட 7 சவரன் நகை ஒப்படைப்பு
ADDED : ஜன 25, 2024 12:01 AM

திருத்தணி:ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சாம்பசிவ ராவ், 54. இவர், தன் மனைவி சேஷாக்குமாரியுடன் நேற்று முன்தினம் இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை எதிரில் உள்ள கார்த்திகேயன் தேவஸ்தான விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
நேற்று காலை முருகன் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்த பின், மீண்டும் விடுதிக்கு வந்து, உடைமைகளை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில், அறையை சுத்தம் செய்ய தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது, 7 சவரன் நகை இருந்தது. உடனடியாக விடுதி மேலாளர் மற்றும் இணை ஆணையருக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து, இணை- ஆணையர் ரமணி, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் மற்றும் போலீசார் விடுதிக்கு வந்து நகையை மீட்டு, சாம்பசிவராவ் மொபைல் போனில் தொடர்பு கொண்டு விடுதிக்கு வரவழைத்தனர்.
பின், அவர்களிடம் விட்டு சென்ற நகைகளின் அடையாளங்கள் கேட்டறிந்து நகைகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து, நகையை மீட்டு கொடுத்த ஒப்பந்த ஊழியர்களையும் அதிகாரிகள் பாராட்டினர்.