/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழுதாவூரில் பழுதடைந்த உரக்கூடம்
/
தொழுதாவூரில் பழுதடைந்த உரக்கூடம்
ADDED : ஜன 26, 2025 04:03 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சி, பள்ளத் தெருவில், அரசு நடுநிலைப் பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம் ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன், இயற்கை உரம் மற்றும் மண்புழு தயாரிக்கும் கூடம் கட்டடப்பட்டது.
இந்த உரக்கிடங்கு கூடம், 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து உள்ளது. இந்த கட்டடம் அருகே, பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இந்த கூடம் இருக்கும் பகுதியில் விளையாட செல்வதும் தொடர்கிறது. இந்நிலையில், இந்த கூடத்திற்குள் பாம்பு, விஷப்பூச்சிகள் வலம் வருவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், உரக்கூடம் இடிந்து விழுந்தால், மாணவர்கள் காயமடையும் சூழல் உள்ளது.
எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் உள்ள உரக்கிடங்கு கூடத்தை அகற்ற, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.