ஹோட்டல், இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி புதிய முயற்சி: தினமும் 100 யூனிட் வினியோகிக்க திருவள்ளூர் நகராட்சி முடிவு
ஹோட்டல், இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி புதிய முயற்சி: தினமும் 100 யூனிட் வினியோகிக்க திருவள்ளூர் நகராட்சி முடிவு
UPDATED : ஆக 31, 2026 10:03 PM
ADDED : ஆக 31, 2026 08:32 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் சேகரமாகும் ஹோட்டல் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தினமும் 100 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, வினியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியின் 27 வார்டுகளில், 19,022 வீடுகள், 3,125 கடைகள், 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. 82,185 பேர் வசித்து வருகின்றனர்.
வீடு, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் 10.81 மக்கும் குப்பை, 13.85 மக்காத குப்பை என, 24.66 டன் குப்பை சேகரமாகிறது.
அவற்றில், மக்காத குப்பையை தரம் பிரித்து, மறு சுழற்சிக்காக, தனியார் நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மக்கும் குப்பை கழிவுகள் தரம் பிரித்து, உரமாக மாற்றப்பட்டு வருகின்றன.
நகராட்சியில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்ற, கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், 4.7 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், ஹோட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் தனியார் வங்கியின் சமூக பங்களிப்பு வாயிலாக, 1.70 கோடி ரூபாய் மதிப்பில், செயல்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியில், உணவகங்கள், இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
இதற்காக, நுங்கம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில், மின்சாரம் தயாரிக்க, உயிரி வாயு மற்றும் இயற்கை உர ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக, 5 டன் கொள்ளளவு உடைய கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது.
சேகரமான உணவக கழிவுகளை, பிரத்யேமாக அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் கொட்டி அரைக்கப்பட்டு, 'கன்வேயர்' பெல்ட் வாயிலாக செரிமான தொட்டிக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கிருந்து, அரைக்கப்பட்ட குப்பை கழிவு, கூழாக மாற்றி, 5 டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கலனிற்கு, குழாய் மூலம் கொண்டு செல்லப்படும்.
அந்த சேமிப்பு கலனில் சேகரமாகும், அரைக்கப்பட்ட குப்பை கூழில் இருந்து, மீத்தேன் வாயுவாக உருமாற்றப்படும். அந்த வாயு, மின்சாரமாக உற்பத்தியாகி, அருகில் உள்ள, மின்சேகரிப்பு கலனிற்கு பேட்டரி மூலம் கொண்டு செல்லப்பட்டு, மின்சாரமாக சேமிக்கப்படும். குப்பை கழிவுகளில் இருந்து, தினம் 100 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும்.
அந்த மின்சாரத்தை, குப்பை கழிவை அரைப்பதற்கும், திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் உள்ள மின் விளக்குகள் மற்றும் அருகில் உள்ள நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள தெரு விளக்குகள் எரியவும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்துவதன் வாயிலாக, திருவள்ளூர் நகரில், உணவகங்கள் மற்றும் இறைச்சி கழிவுகளை சேகரித்து, தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
இதன் வாயிலாக, திருவள்ளூர் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இறைச்சி கழிவுகளை, மின்சாரம் தயாரிப்பதற்காக, சேகரிக்கப்பட்டு, நகரை துாய்மையாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
