ADDED : மார் 26, 2026 06:22 PM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலகம் அருகே உள்ள நீர்வரத்து கால்வாயில் குப்பை கொட்டப்பட்டு துார்ந்துள்ளது.
பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில், புல்லுார் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டில் இருந்து பள்ளிப்பட்டு வனச்சரக அலுவலகத்தை ஒட்டி நீர்வரத்து கால்வாய் செல்கிறது.
வனச்சரக அலுவலகத்தை ஒட்டி சமீபத்தில் நீதிமன்ற வளாகமும் கட்டப்பட்டது. நீதிமன்ற வளாகம் செயல்பாட்டுக்கு வந்ததும், இந்த காப்புக்காட்டை ஒட்டிய பகுதி வளர்ச்சியடைய துவங்கியது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பகுதி மக்கள், வனச்சரக அலுவலகத்தை ஒட்டி செல்லும் நீர்வரத்து கால்வாயில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், நீர்வரத்து கால்வாய் துார்ந்துள்ளது. மேலும், இக்கால்வாயில் கட்டுமான கழிவுகளும் கொட்டப்படுகின்றன.
நீர்வரத்து கால்வாய் துார்ந்து வருவதால், காப்பு காட்டில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
