/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல் ஆமைகளை பாதுகாக்க மீனவர்களிடம் விழிப்புணர்வு
/
கடல் ஆமைகளை பாதுகாக்க மீனவர்களிடம் விழிப்புணர்வு
ADDED : பிப் 05, 2025 09:46 PM
பழவேற்காடு:பழவேற்காடு கடற்கரை பகுதிகளில், இரண்டு மாதங்களாக அவ்வப்போது கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. கடலோரா மாவட்டங்களில், ஒரு மாதத்தில், 350க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதாக, வனத்துறை மற்றும் தனியார் கடல் ஆமைகள் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம், கடல் ஆமைகள் இறப்பு குறித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
அதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்பகுதிகளில் மீன்வளம், மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை, கடலோர பாதுகாப்பு மற்றும் கடலரோ காவல்படை ஆகிய துறைகளுடன் இணைந்து, நாட்டு படகு மீனவர்களுடன் கண்காணிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று, பழவேற்காடில், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடந்தது.
இதில், மீன்வளம், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். கடல் ஆமைகளின் இனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.
பின், மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாவது:
கடற்கரைக்கு முட்டையிட வரும் கடல் ஆமைகளையும், அதன் முட்டைகளையும் பாதுகாக்க வேண்டும். கடலில் ஆமைகள் செல்லும் வழித்தடத்தில் மோட்டார் படகுகளை இயக்கி அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.