/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் ரத்த வங்கி துவக்கம் 60 கி.மீ., பயணத்திற்கு 'குட்பை'
/
பொன்னேரியில் ரத்த வங்கி துவக்கம் 60 கி.மீ., பயணத்திற்கு 'குட்பை'
பொன்னேரியில் ரத்த வங்கி துவக்கம் 60 கி.மீ., பயணத்திற்கு 'குட்பை'
பொன்னேரியில் ரத்த வங்கி துவக்கம் 60 கி.மீ., பயணத்திற்கு 'குட்பை'
ADDED : ஜூலை 05, 2025 10:43 PM

பொன்னேரி:பொன்னேரி அரசு மருத்துவமனையில், ரத்த வங்கி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால், அவசர தேவைக்கு ரத்தம் பெறுவதற்கு, 60 கி.மீ., தொலைவில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை என்பதால், நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில், 2021ல் இருந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்கு, 60 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை அளிப்பதற்கு தேவையான எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., சி.டி., ஸ்கேன் என, பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, ஐ.சி.யு.,வில் உள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் வசதி, அறுவை அரங்கம், தீவிர கண்காணிப்பு அறை என, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள இந்த மருத்துவனையில், ரத்த வங்கி இல்லாமல் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவசர சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை பெற, 60 கி.மீ., தொலைவில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வரவேண்டிய அவலநிலை இருந்து வந்தது.
கட்டமைப்புகள்
இப்பகுதியில் ஏராளமானோர் ரத்ததானம் செய்ய விரும்புகின்றனர். அவர்களும் அவசரத்திற்கு யாருக்கும் உதவ முடியவில்லை. இதையடுத்து ரத்த வங்கி துவங்குவதற்காக, 2023ல் கட்டடம் மற்றும் தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மருத்துவ குழுவினர் நியமிக்காதது, அனுமதி சான்று கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பயன்பாடிற்கு வராமல் திட்டம் கிடப்பில் இருந்தது.
பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை தொடர்ந்து, தற்போது பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இதற்கான துவக்க விழாவில், கலெக்டர் பிரதாப் மற்றும் பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று, ரத்த வங்கியை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
ஆலோசனை மையம்
மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கல்பனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இங்கு, ரத்ததானம் செய்பவர்களுக்கு இரண்டு படுக்கை வசதிகளுடன் கூடிய தனி அறை, தானமாக பெறப்பட்ட ரத்தத்தை 'ஸ்கிரீனிங்' செய்து, பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தனித்தனி அறைகள், ஆலோசனை மையம் என, 1,000 சதுர அடியில் ரத்த வங்கி அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலமாக, அவசர உதவிக்கு ரத்தம் பெறுவதற்கு, 60 கி.மீ., தொலைவில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை என்பதால், நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் 100வது ரத்த வங்கி
பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி துவங்கப்பட்டு உள்ளது. இது, தமிழகத்தின் 100வது ரத்த வங்கியாக அமைத்திருப்பது சிறப்பு. பொதுமக்கள், தன்னார்வலர்கள் ரத்ததானம் அளிக்க ஏதுவாக அமைந்துள்ளது. இங்கிருந்து அவசர தேவைக்கு மற்ற இடங்களுக்கு ரத்தம் கொண்டு செல்வதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
- கலெக்டர், திருவள்ளூர்.