
ஆபத்தை உணராத மாணவர்கள்
திருத்தணி ரயில் நிலையம் அருகே, டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும், பெரும்பாலான மாணவர்கள் திருத்தணி பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு, தார்ச்சாலை வழியாக செல்லாமல், ரயில் தண்டவாளத்தில் இறங்கி நடந்து செல்கின்றனர்.
ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும், அதே நிலையில் மாணவர்கள் தண்டவாளத்தில் நடந்து செல்கின்றனர். எனவே ரயில்வே போலீசார், பள்ளியில் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, தண்டவாளத்தில் நடந்து செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விளக்க வேண்டும்.
-- க.வினாயகம், திருத்தணி.
உருக்குலைந்த மின்கம்பம்
சீரமைக்க வேண்டும்
பேரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில், பேரம்பாக்கத்தை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்கைளைச்சேர்ந்த பகுதிவாசிகள் புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் போன்ற பல பணிகளுக்கு சென்று வருகின்றனர். இதில் மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்துஎலும்புக்கூடாக மாறியுள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
-கே.குமார்,கொண்டஞ்சேரி.
பள்ளி எதிரே
தேங்கும் மழைநீர்
பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அத்திமாஞ்சேரிபேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில், அரசு மகளிர்உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், மகளிர் உயர்நிலைப் பள்ளி வழியாக, மழைநீர் பாய்ந்து செல்கிறது. பள்ளி வளாகத்தில் இருந்து பாயும் மழைநீர், பள்ளி எதிரே சாலையில் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவர்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேடு பள்ளமாக அமைக்கப்பட்டுள்ள சாலையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
--கே.கமலக்கண்ணன், அத்திமாஞ்சேரிபேட்டை.

