ADDED : மார் 12, 2024 05:12 AM

சாலையோரம் கொட்டும் மருத்துவ கழிவுகள்
திருத்தணி ---நல்லாட்டூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பூனிமாங்காடு கிராமம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரேயும், மாநில நெடுஞ்சாலையோரம் அப்பகுதி மக்கள் குப்பையை கொட்டுகின்றனர்.
இதுதவிர ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் மருந்து பாட்டில்களும் கொட்டுகின்றனர்.
சில நேரங்களில், நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் சுவாச கோளாறு மற்றும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பையை அகற்றி, துாய்மைப்படுத்த வேண்டுகிறேன்.
- -எஸ்.வெங்கடேசன், பூனிமாங்காடு.
குடியிருப்பில்
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருத்தணி தாலுகா, குன்னத்துார் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் கால்வாய் ஆங்காங்கே புதைந்தும், முட்புதர்கள் வளர்ந்தும் உள்ளன.
தற்போது இக்கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் குளம் போல் தேங்கியும், கால்வாயில் தண்ணீர் தேங்கியும் உள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பகல் நேரத்திலேயே கடிக்கிறது.
மேலும் இரவு நேரத்தில் துாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, கால்வாயை சுத்தம் செய்து சீரமைத்து தர வேண்டும்.
--- என்.ரமேஷ், குன்னத்துார்.
ஆக்கிரமிப்பில் சுரங்க பாதை
கவரைப்பேட்டையில், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர்.
அந்த சுரங்க பாதையை ஆக்கிரமித்து, பூ மற்றும் பழ கடைகள் இயங்கி வருகின்றன. பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- எம்.ராஜேஷ், கவரைப்பேட்டை.
