ADDED : ஆக 01, 2025 12:56 AM

பொன்னேரி:பழைய கட்டடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளி மீது, சுவர் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
பொன்னேரி அடுத்த வெள்ளோடை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 23. கட்டட தொழிலாளி.
நேற்று இவர், பொன்னேரி அடுத்த சைனாவரம் கிராமத்தில், சக தொழிலாளர்களுடன் இணைந்து பழைய வீடு ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் ஒன்றை இடித்து தள்ளும்போது, கட்டட இடிபாடுகளில் தினேஷ்குமார் சிக்கிக்கொண்டார்.
சக தொழிலாளர்கள் இடிபாடுகளை அகற்றி, பலத்த காயங்களுடன் இருந்த தினேஷ்குமாரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பொன்னேரி போலீசார் தினேஷ்குமாரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
