கிரைம் கார்னர்: சிறுவர்களை மதுவாங்க சொன்ன தகராறில் ஒருவருக்கு வெட்டு
கிரைம் கார்னர்: சிறுவர்களை மதுவாங்க சொன்ன தகராறில் ஒருவருக்கு வெட்டு
UPDATED : ஏப் 28, 2026 08:23 PM
ADDED : ஏப் 28, 2026 08:11 PM
ஆவடி: ஆவடி, கவுரிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சார்லி, 41 மற்றும் சரவணன், 40. இருவரும் பூமாலை கட்டும் தொழில் செய்து வருகின்றனர். இருவரும், கடந்த 26ம் தேதி மது போதையில் கம்பர் தெரு அருகே நின்றிருந்தனர். அங்கு வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுவர்களை, மது வாங்கி வரும்படி சரவணன் வற்புறுத்தி உள்ளார். இதை சார்லி தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த சரவணன் பிளேடால் சார்லியின் இடது முழங்கை, மார்பில் கிழித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சார்லியை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விசாரித்த ஆவடி போலீசார், சரவணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
***
புரோகிதரிடம் மொபைல் போன்
பறித்த இளைஞர்கள் பிடிபட்டனர்
புழல்: மடிப்பாக்கம், அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன், 56; புரோகிதர். இவர், கடந்த 19ம் தேதி, புழல், கதிர்வேடு பகுதியில் உள்ள மண்டபத்தில் வேலை முடித்து, மண்டபத்தின் வெளியே வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், கணேசனின் மொபைல் போனை பறித்து தப்பினார். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 19, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பரத், 21, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
***
3 கிலோ கஞ்சாவுடன்
செங்குன்றம் வாலிபர் கைது
புழல்: புழல், காவாங்கரை ஏரிக்கரை சந்திப்பு அருகே புழல் போலீசார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரது பையில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது செங்குன்றத்தைச் சேர்ந்த விமல்நாதன், 30, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விமல் மீது, பெட்ரோல் குண்டு மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததாக இரண்டு வழக்குகள் ஏற்கனவே உள்ளன.
***
புளியந்தோப்பில் டீக்கடை
ஷட்டர் உடைத்து திருட்டு
பேசின் பாலம்: புளியந்தோப்பு, கிருஷ்ணபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 52. இவர், புளியந்தோப்பு, கே.பி.பார்க், 8வது பிளாக் அருகே நான்கு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் வைத்திருந்த 6,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து பேசின் பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
