மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
UPDATED : மே 17, 2026 08:53 PM
ADDED : மே 17, 2026 08:02 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் பிரியதர்ஷினி, 14. கடந்த 14ம் தேதி திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நேற்று முன்தினம் இரவு, பிரியதர்ஷினி துாங்கிய நிலையில், நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மஞ்சங்காரணி வேல்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில்
ஆண் சடலம் மீட்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தகவல் அறிந்ததும், திருவள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
முன்விரோதத்தில் தாக்கி
மிரட்டல் விடுத்தவர் கைது
திருத்தணி: திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 46. இவர், நேற்று காலை தாமரைகுளம் பகுதிக்கு சென்ற போது, முன்விரோதம் காரணமாக ஜோசப் என்கிற சந்தோஷ், 23, என்பவர், ஆறுமுகத்தை தாக்கினார். இதை தடுக்க வந்த ஆறுமுகத்தின் சகோதரியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷை கைது செய்தனர்.
