ADDED : ஜூலை 09, 2026 11:11 PM
தரகர்கள் இருவர் மீது வழக்கு
கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த கம்மவார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 42. இவரும் கீழ்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ், 46, என்பவரும், ரியல் எஸ்டேட் தரகு பணி செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், நிலப்பரிவர்த்தனை சம்பந்தமாக, 5 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்று, இருவரும் பங்கிட்டு கொண்டனர். அதன்பின் அந்த நிலப்பரிவர்த்தனை நடை பெறாததால், பணத்தை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில், இரு தினங்களுக்கு முன் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் மாலை பாக்கியராஜ், தேவதாஸ் கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மொபைல் போன் கடையில் திருட்டு
காக்களூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் உமாபதி, 60. இவர், திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில், கடந்த 10 ஆண்டுகளாக மொபைல் போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த, 12,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து, உமாபதி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
காப்பகத்திலிருந்து சிறுவன் மாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காரணை பகுதியில் இயங்கி வரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில், பாபு, 44, என்பவர் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 7ம் தேதி, திருநின்றவூர் பகுதியில் சுற்றித்திரிந்த 15 வயது சிறுவனை, குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் காப்பகத்தை விட்டு வெளியேறிய சிறுவன், பின் திரும்பவில்லை. இதுகுறித்து, பாபு கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
