/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு
/
திருத்தணியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு
ADDED : செப் 30, 2024 06:34 AM

திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்பதால், அதிகாலை 5:30 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழி தரிசனத்தில், 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று, வழக்கத்திற்கு மாறாக, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தேர்வீதியில் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க காத்திருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றதால், மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், மலைப்பாதை மற்றும் அரக்கோணம் சாலையில், கடும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாமல் போலீசார் தவித்தனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.