ADDED : பிப் 05, 2024 03:56 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி அருகே டோல்கேட் பகுதியில் நேற்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் டிட்டோ ஜாக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும். மேலும் அரசாணை 243க்கு நன்றி தெரிவிக்கும் மாநாடுகளில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பதை தவிர்க்க வலியுறுத்தியும், நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தும் சங்கங்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராஜாஜி, முரளி, முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் தாஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

