/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
/
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : மே 19, 2025 02:20 AM

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் ஊராட்சி, குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 1ம் தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது.
மேலும், திரவுபதி மற்றும் சுபத்திரை திருமணம் நடந்தது. கடந்த 12ம் தேதி அர்ஜுனன் தபசு நடந்தது. நேற்று காலை 10:20 மணியளவில், கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை, நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
குடிகுண்டா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.
இரவு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை குடிகுண்டா மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.