மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் :குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் :குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ADDED : மார் 25, 2026 06:44 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை பொது தேர்தல், ஏப்., 23ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், 4,005 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.
இங்கு, 8,663 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 6,240 கட்டுப்பாட்டு கருவிகள், 5,968 வி.வி.பேட் இயந்திரங்கள் என, மொத்தம் 20,871 இயந்திரங்கள், ஏற்கனவே 'எல்காட்' பொறியாளர்கள் மூலம், சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்ப, குலுக்கல் முறை நடைபெற்றது. இப்பணி, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
அதன்படி, முதல் கட்டமாக, 4,821 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 4,821 கட்டுப்பாட்டு கருவி மற்றும் 5,223 வி.வி.பேட் என, மொத்தம் 14,865 கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 6,006 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்து, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளன.
