/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1.40 கோடி தங்கம் கடத்தி வந்த ஊழியர் கைது
/
ரூ.1.40 கோடி தங்கம் கடத்தி வந்த ஊழியர் கைது
ADDED : டிச 17, 2024 12:40 AM
சென்னை,ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் இருந்து, சென்னை வரும் விமானத்தில் தங்கம், 'இ - சிகரெட்' உள்ளிட்ட பொருட்கள், கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள், விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துபாயில் இருந்து 'ஏர் இந்தியா' விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மேலும், விமானத்தின் 'கேபின் க்ரூ' எனும் விமான ஊழியர்களின் தனி அறைக்கு ஊழியர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஊழியர் ஒருவர் அணிந்திருந்த 'பெல்ட்'டைசுற்றி தங்க கட்டிகள் மறைத்து கடத்தியது தெரியவந்தது.
அதில் 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான 1.70 கிலோ தங்கம் இருந்தது. பயணி ஒருவர் 'கமிஷன்' தருவதாக கூறியதால் கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.