ADDED : பிப் 26, 2026 05:55 AM
ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், குளக்கரை தெருவில் 6.5 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் இருந்தது.
அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய, இந்த தாமரை குளம், தற்போது ஆக்கிரமிப்பால் நான்கு ஏக்கராக சுருங்கியது.
அந்த குளத்தை சீரமைத்து விரைவில் நடைபாதை பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இந்நிலையில், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த நபர், தாமரை குளத்தின் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 1500 சதுர அடியில், வணிக நோக்கத்துடன் 'மினி ஹால்' ஒன்றை கட்டியுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தும், 'நோட்டீஸ்' கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சரண்யா உத்தரவுப்படி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், திருமுல்லைவாயில் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கடைகளை பூட்டி, நேற்று 'சீல்' வைத்தனர்.
