/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்றில் மேம்பாலம்: மண் பரிசோதனை நான்கு முறை சேதமடைந்த தரைப்பாலத்திற்கு விமோசனம்
/
கூவம் ஆற்றில் மேம்பாலம்: மண் பரிசோதனை நான்கு முறை சேதமடைந்த தரைப்பாலத்திற்கு விமோசனம்
கூவம் ஆற்றில் மேம்பாலம்: மண் பரிசோதனை நான்கு முறை சேதமடைந்த தரைப்பாலத்திற்கு விமோசனம்
கூவம் ஆற்றில் மேம்பாலம்: மண் பரிசோதனை நான்கு முறை சேதமடைந்த தரைப்பாலத்திற்கு விமோசனம்
ADDED : ஜன 30, 2024 12:42 AM

திருவள்ளூர் : திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் நான்கு முறை சேதமடைந்த கூவம் ஆற்று தரைப்பாலத்திற்கு புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை பணி நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரிநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
எட்டு கி.மீ.,
இந்த பாலத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர். மேலும் இந்த வழியாக தினமும் 5,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022, என மூன்று முறை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் பேரம்பாக்கம், இருளஞ்சேரி வழியாக எட்டு கி.மீ., துாரம் சுற்றி கொண்டஞ்சேரி வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் ஆந்திரா உட்பட பிற மாநிலங்களில் இருந்து கடம்பத்துார் ரயில்வே மேம்பாலம் வழியாக வந்த கனரக வாகனங்கள் திருவள்ளூர், மணவாளநகர் வழியாக ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
கடந்த 2016, 2021, 2022ம் ஆண்டு என மூன்று முறை தரைப்பாலம் சேதமடைந்தும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்த தரைப்பாலம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் நான்காவது முறையாக சேதமடைந்துள்ளது பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மாவட்ட நிர்வாகம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த தரைப்பாலம் அமைக்க மண் பரிசோதனை நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;
தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட 20 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில் மத்திய சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது புதிய மேம்பாலம் கட்டுவதற்கு முதல் கட்டமாக மண் பரிசோதனை மற்றும் விரிவான திட்ட அறிக்கை கேட்டு உத்தரவு வந்துள்ளது. தற்போது மண் பரிசோதனை நடந்து வருகிறது.
இதேபோல் திருத்தணி - பொதட்டூர்பேட்டை - பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையிலும் 15.10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு முதல் கட்டமாக மண் பரிசோதனை மற்றும் விரிவான திட்ட அறிக்கை கேட்டு உத்தரவு வந்துள்ளது. தற்போது மண் பரிசோதனை நடந்து வருகிறது.
அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் இரு பகுதிகளிலும் புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.