/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனைகள் கட்டமைப்பு ஆஸ்திரேலியா அமைச்சர் பாராட்டு
/
அரசு மருத்துவமனைகள் கட்டமைப்பு ஆஸ்திரேலியா அமைச்சர் பாராட்டு
அரசு மருத்துவமனைகள் கட்டமைப்பு ஆஸ்திரேலியா அமைச்சர் பாராட்டு
அரசு மருத்துவமனைகள் கட்டமைப்பு ஆஸ்திரேலியா அமைச்சர் பாராட்டு
ADDED : பிப் 23, 2024 10:52 PM

சென்னை:''தமிழக அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு சிறப்பாகவும், சுகாதாரமாகவும் உள்ளது,'' என, மேற்கு ஆஸ்திரேலியா மாநில மருத்துவத் துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலியா மாநில மருத்துவம், மனநலத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் தலைமையிலான மருத்துவ குழுவினர், சென்னை வந்துள்ளனர்.
அவர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் வார்டுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின், மேற்கு ஆஸ்திரேலிய மாநில அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் கூறியதாவது:
சிறந்த மருத்துவ வசதிகளை, தமிழக அரசு செய்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச வார்டுகள் சிறப்பாக உள்ளன. இங்குள்ள மருத்துவ கட்டமைப்பு சிறப்பாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. இரு நாடுகள் இடையே, மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில், ஆஸ்திரேலியா நர்சிங் மற்றும் மருத்துவ மாணவர்கள், தமிழகத்திலும், தமிழக மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலும் பயிற்சி பெறும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழக மருத்துவ கட்டமைப்பு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவ கட்டமைப்பின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கிண்டி முதியோர் நல மருத்துவமனை மற்றும் நான்கு மருத்துவமனை கட்டடங்களை, பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். மேலும், 10 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 541 பேருக்கு ஆரம்ப கட்ட நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.