ADDED : மார் 08, 2026 05:48 AM
ஊத்துக்கோட்டை: கி ருஷ்ணா நீர் வினாடிக்கு, 538 கன அடி நீர், தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
கடந்த 23ம் தேதி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், 25ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,100 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிப்படியாக உயர்ந்து, 538 கன அடி வீதம் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி நிலவரம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 420 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. மொத்த கொள்ளளவு 3.23 டி.எம்.சி., தற்போது, 2.981 டி.எம்.சி., உள்ளது. மொத்தம் நீர்மட்டம் 35 அடி. தற்போது, 34.51 அடி நீர் உள்ளது.
இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 500 கன அடி நீர் திறக்கப்பட்டு, தலா 250 கன அடி நீர் புழல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு செல்கிறது.
