ADDED : ஏப் 14, 2025 01:12 AM

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் எஸ்.பி.கண்டிகை அமைந்துள்ளது. இங்கு, அரசு நடுநிலைப் பள்ளிக்கு அருகே, தனியார் கட்டடத்தில் ஊர்ப்புற நுாலகம் செயல்பட்டு வந்தது.
இக்கட்டடம் பழுதடைந்துள்ள நிலையில், நிரந்தர கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், எஸ்.பி.கண்டிகை ஊர்ப்புற நுாலகம், தற்போது அதே ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக சமத்துவபுரத்தில் மூடப்பட்டிருந்த, அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலக கட்டடத்தில், தற்போது ஊர்ப்புற நுாலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், சமத்துவபுரம் பகுதிவாசிகள் நாளிதழ்கள், புத்தகங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால், சமத்துவபுரம் பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சமத்துவபுரத்தில் நுாலகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
