ADDED : ஏப் 08, 2026 05:58 AM
திருவள்ளூர்: தனியார் நிறுவன சூப்பர்வைசரை ஆபாசமாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிசங்கர், 34; இவர், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்து வரும், ஒரியண்டன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், நாராயணபுரம் பாலம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு வந்த நாரயணபுரத்தைச் சேர்ந்த சுனில், 29, என்பவர் ஹரிசங்கரிடம், 'நான் சொல்ற படி தான் ரோடு போட வேண்டும்' என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுனில், பணியில் ஈடுபட்டிருந்த லாரியின் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும், பணியில் இருந்த ஹரிசங்கர் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.
இதில் காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரித்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சுனிலை கைது செய்தனர்.
