ADDED : பிப் 09, 2025 09:19 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி நோக்கி மாநகர சொகுசு சாய்தள பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன், 55, என்பவர், ஓட்டுநராகவும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், 45, என்பவர், நடத்துநராகவும் பணிபுரிந்தனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, இரவு 9.40க்கு பேருந்து இயக்கிய ஓட்டுனர் நெடுஞ்செழியல் ஒருவழிப் பாதையில் வந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த கார் ஓட்டுநர் ஏன் இவ்வாறு ஒருவழிப் பாதையில் வருகிறீர்கள் என கேட்டபோது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த கார் டிரைவர், மாநகர சொகுசு பேருந்தின் டிரைவர் இருக்கையின் வலது புறத்தில் உள்ள கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு சென்றார்.
இது குறித்து பேருந்து ஓட்டுநர் நெடுஞ்செழியன் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.