/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்களை மறைத்த பனி, போகி புகை மூட்டம் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 3 பேர் பலி
/
கண்களை மறைத்த பனி, போகி புகை மூட்டம் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 3 பேர் பலி
கண்களை மறைத்த பனி, போகி புகை மூட்டம் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 3 பேர் பலி
கண்களை மறைத்த பனி, போகி புகை மூட்டம் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 3 பேர் பலி
ADDED : ஜன 15, 2024 12:12 AM

சென்னையில், நேற்று அதிகாலை முதல் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடியதாலும், மார்கழி மாதத்தின் நிறைவு நாள் பனி அதிகளவில் பொழிந்ததாலும் அடர் இருட்டானது. கண்களை மறைத்த புகை மூட்டத்தால், வெவ்வேறு இடங்களில் விபத்துகள் நடந்தன. இதில், மூன்று பேர் உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்தனர்.
புழல், கண்ணப்பசாமி நகர் 16வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன், 19; கல்லுாரி மாணவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் வசந்தகுமார், 20, கண்ணன், 20, ஆகியோருடன், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் 'போகி' பண்டிகை கொண்டாடினர்.
அதன்பின், காவாங்கரை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, புழலில் இருந்து செங்குன்றத்திற்கு சென்ற சரக்கு லாரி மோதியது.
இதில், கார்த்தீஸ்வரன், வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கண்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் புகை மூட்டத்தால் விபத்து நடந்ததாக தெரியவந்தது; லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவன் பலி
கும்மிடிப்பூண்டி, கண்ணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அஸ்வந்த், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது நண்பர் அரவிந்த், 12; ஏழாம் வகுப்பு மாணவர். இருவரும், நேற்று காலை டூ- - வீலரில், காரூரில் இருந்து கண்ணம்பாக்கம் நோக்கி சென்றனர்.
கண்ணம்பாக்கம் கிராம எல்லையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம், கடுமையான பனி மூட்டத்தால் இவர்களது கண்ணுக்கு புலப்படவில்லை.
5 பேர் படுகாயம்
அதன் மீது மோதியதில், டூ - வீலரை ஓட்டி வந்த அஸ்வந்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை - --திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி, நர்ணமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே, இரு சக்கர வாகனத்தில் இளநீர் கட்டி வந்தவர் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, கோயம்பேடில் இருந்து திருத்தணிக்கு பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது. மேலும், எதிரே வந்த சரக்கு ஆட்டோவின் மீதும் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
விபத்தில், சரக்கு வேனில் வந்த திருத்தணி கே.ஜி.கண்டிகை சேர்ந்த தெய்வானை, 30, வள்ளியம்மா, 40, ஓட்டுனர் சூர்யா, 32, இரு சக்கர வாகனத்தில் வந்த பாபு, 39, ஆட்டோ ஓட்டுனர் சிங்கரய்யா, 44, என ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ஆந்திராவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பூக்கள் ஏற்றி வேன் வந்தது. மதுரவாயல் அருகே, புகை மூட்டத்தால் சாலை சரியாக தெரியாமல் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்ததால், வேன் சாலை நடுவே கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால், ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- நமது நிருபர் குழு -