/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,000க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல்...வறண்டன!:வரத்து கால்வாய்கள் சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம்
/
1,000க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல்...வறண்டன!:வரத்து கால்வாய்கள் சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம்
1,000க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல்...வறண்டன!:வரத்து கால்வாய்கள் சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம்
1,000க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல்...வறண்டன!:வரத்து கால்வாய்கள் சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : பிப் 29, 2024 09:48 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 1,167 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், கூவம், கொசஸ்தலை, அடையாறு, ஆரணி ஆகிய ஆறுகளின் கீழ் நீர்வள துறை கட்டுப்பாட்டில், 586 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
சிக்கல்
ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி வீணாகி வருகின்றன. மேலும், பல ஏரிகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், தற்போது நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 586 ஏரிகளில், 500க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.
மேலும், ஏரிகளில் துார் வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக சவுடு மண் அள்ளப்பட்டதால், பல ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல ஏரிகள் முறையான பராமரிப்பில் இல்லாததால், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி குடியிருப்புகளாகவும், விளை நிலங்களாகவும் மாறியுள்ளது. மேலும், சில ஏரிகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன.
இதற்கு, அதிகாரிகள் வரத்து கால்வாய்களை முறையாக சீரமைக்காததே காரணம் எனவும், ஏரிகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சீரமைப்பு பணிகள்
இதுகுறித்து நீர்வள ஆதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பல ஏரிகள், அரசியல் கட்சியினர் தலையீட்டால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை' எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேபோல், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 550க்கும் மேற்பட்ட ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. மேலும், ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய் புதர் மண்டி இருப்பதால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதார துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 1,050 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு உள்ளன.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்வள ஆதார துறை மற்றும் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

