/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
/
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
ADDED : அக் 10, 2025 08:09 AM

திருவள்ளூர்; கும்மிடிப்பூண்டியில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பெயின்டர், கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டார். அருகில் வசித்து வரும் பீஹார் வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் டிமான் சந்திராதாஸ், 30. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி காந்தி நகரில் சாய்பாபா கோவில் எதிரே வாடகை அறையில் தங்கி வசித்தபடி, பெயின்டிங் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை அவர் வசித்த அறையில், கூர்மையான ஆயுதத்தால் மார்பில் குத்துப்பட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். உடலை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சந்திராதாஸ் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ள மற்றொரு அறையில், அவரது நண்பர் கொத்தனார் வேலை பார்க்கும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கார்த்திலால் ஹரிஜன், 30, என்பவர் வசித்து வருகிறார்.
அவரும், சந்திராதாசும், நேற்று முன்தினம் இரவு ஒன்றாக கஞ்சா அடித்தது தெரிந்தது. கார்த்திலாலின் வலது கையில் உள்ள மூன்று விரல்களில், ரத்த காயங்களுடன் கட்டுப்போடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கார்த்திலால் ஹரிஜனிடம் விசாரித்து வருகின்றனர். அவர், சந்திராதாஸை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.