நெரிசலில் தத்தளிக்கும் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
நெரிசலில் தத்தளிக்கும் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
ADDED : செப் 05, 2026 09:02 PM
ஊத்துக்கோட்டை: மத்திய – மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் – சத்தியவேடு நெடுஞ்சாலையை இணைக்கும் இடமாக ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பில் உள்ள இச்சாலை வழியாக தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
இங்குள்ள பஜார் பகுதியை கடப்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. சாலையின் இரண்டு பக்கமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து பூ, பழம், காய்கறி உள்ளிட்ட கடைகள் வைத்துள்ளனர்.
இதனால், இப்பகுதியில் அரை கி.மீட்டரை கடக்க ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பள்ளி நாட்களில் மாணவ – மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், வருவாய் துறையினர் முயற்சி மேற்கொண்டு, சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்தனர்.
ஆனால், ஊத்துக்கோட்டை காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பு இல்லாததால், தற்போது வியாபாரிகள் மீண்டும் கடைகளை சாலையில் வைத்துள்ளனர். இதனால், தினமும் நெரிசல் ஏற்படுகிறது. இதேநிலை, திருவள்ளூர் செல்லும் சாலையிலும் உள்ளது.
அங்குள்ள அண்ணாதுரை சிலை அருகில், நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால், வாகனங்கள் திரும்ப முடியாத நிலை உள்ளது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் கவிதா உடனே நடவடிக்கை எடுத்து, மத்திய – மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
