/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் தேவஸ்தான அறை கிடைக்காமல்... பரிதவிப்பு!தனியார் விடுதிகளில் இரட்டிப்பு வாடகை வசூல்
/
திருத்தணியில் தேவஸ்தான அறை கிடைக்காமல்... பரிதவிப்பு!தனியார் விடுதிகளில் இரட்டிப்பு வாடகை வசூல்
திருத்தணியில் தேவஸ்தான அறை கிடைக்காமல்... பரிதவிப்பு!தனியார் விடுதிகளில் இரட்டிப்பு வாடகை வசூல்
திருத்தணியில் தேவஸ்தான அறை கிடைக்காமல்... பரிதவிப்பு!தனியார் விடுதிகளில் இரட்டிப்பு வாடகை வசூல்
ADDED : பிப் 17, 2025 11:01 PM

திருத்தணி, பிப். 18-- திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தான குடில்களில் தங்குவதற்கு அறைகள் முன்பதிவு செய்ய ஆன்-லைன் சேவை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் விடுதிகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அறைகள் முன்பதிவு மீண்டும் துவங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் இருந்தும், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
சில பக்தர்கள் இரவு தங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி நிறைவேற்றுகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வசதியாக குறைந்த வாடகையில் குடில்கள் மற்றும் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், திருத்தணி பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லத்தில், 39 குளிர்சாதன குடில்கள், 48 அறைகள் உள்ளன.
'ஆன்-லைன்'
மலைப்பாதை எதிரில் கார்த்திகேயன் இல்லத்தில், 52 குடில்கள், 48 அறைகள், மலையடி வாரத்தில் திருக்குளத்தில் சரவணபொய்கை இல்லத்தில், 39 அறைகள் உள்ளன. இந்த அறைகள் பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் விடப்பட்டு வருகிறது.
ஐந்தரை ஆண்டுகளுக்கு முன் வரை, குடில்கள் மற்றும் அறைகள், பக்தர்கள் தங்க ஆன்-லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் முறை இருந்தது.
இதனால், பக்தர்கள் தங்கள் ஊரில் இருந்தே முன்கூட்டியே முன்பதிவு செய்து, அறைகளில் தங்கி, கோவிலுக்கு வந்து முருக பெருமானை வழிபடுவர்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு முதல் தேவஸ்தான அறைகள் எடுப்பதற்கு, 'ஆன்-லைன்' முன்பதிவை கோவில் நிர்வாகம் நிறுத்தியது.
இதனால் திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காமல், தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம், அறைகள் மற்றும் குடில்களை முன்பதிவு செய்வதற்கு, 'ஆன்-லைன்' வசதி மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செயலி
இதுகுறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தணிகை இல்லம், கார்த்திகேயன் இல்லம் மற்றும் சரவணபொய்கை இல்லத்தில் உள்ள அறைகள் மற்றும் குடில்கள் பழுதாகி உள்ளன.
தற்போது தணிகை இல்லம் மற்றும் சரவணபொய்கை ஆகிய குடில்கள் சீரமைத்து பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
அதேபோல் கார்த்திகேயன் இல்லத்தை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
குடில் மற்றும் அறைகள் சீரமைத்த பின், விரைவில், மீண்டும் ஆன்-லைன் முன்பதிவு துவங்கப்படும். இதற்கு முன், தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து வந்தோம்.
ஆனால், தற்போது ஹிந்து சமய அறநிலையத் துறையின் வாயிலாக புதிய செயலியை உருவாக்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறைகள், அபிஷேகம் மற்றும் சேவை டிக்கெட்டுகள் பெறவும் புதிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தாண்டிற்குள் புதிய செயலி நடைமுறைக்கு வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.