/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணி...தீவிரம்!:21,782 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்
/
பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணி...தீவிரம்!:21,782 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்
பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணி...தீவிரம்!:21,782 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்
பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணி...தீவிரம்!:21,782 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்
ADDED : ஏப் 28, 2024 02:21 AM

சோளிங்கர்:திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டத்தில் உள்ள 129 ஏரிகளின் நீராதாரமாக விளங்கும் பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2020ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதமடைந்த அணைக்கட்டு, 19.45 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில், மூன்று மாவட்டங்ளைச் சேர்ந்த, 21,782 ஏக்கர் விளை நிலங்கள் செழிப்படையும்.
ஆந்திர மாநிலம், சேஷாசலம் காப்புக்காட்டில் உருவாகும் நீவா ஆறு, ஆந்திர மாநிலத்தில் 83 கி.மீ., துாரம் பாய்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பொன்னை அருகே, தமிழகத்திற்குள் நுழைகிறது. இங்கிருந்து பொன்னை ஆறாக உருவெடுத்து, பொன்னை அணைக்கட்டு வழியாக மூன்றாக தடுக்கப்பட்டு பிரிந்து பாலாற்றில் கலக்கிறது.
அணைக்கட்டின் மேற்கு கால்வாயில் இருந்து வள்ளிமலை வழியாகவும், கிழக்கு கால்வாயில் இருந்து சோளிங்கர் வழியாகவும் பொன்னை ஆறு பாய்கிறது. பிரதான கால்வாய், திருவலம் வழியாக மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது.
பொன்னை ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக, 11ம் நுாற்றாண்டில், ஆற்றின் குறுக்கே, 216 மீட்டர் நீளம், 21 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பின், 1855ல் இந்த தடுப்பணை புதுப்பிக்கப்பட்டது. 1874ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இதில், கிழக்கு மற்றும் மேற்கில் கால்வாய்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றும் விதமாக அணைக்கட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கரையோர வயல்களுக்கும், ஏரிகளுக்கும் பொன்னை நதிநீர் கொண்டு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.
இந்த அணைக்கட்டின் இரண்டு கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் ஒட்டுமொத்தமாக, அரக்கோணம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 129 ஏரிகளுக்கு சென்றடைகிறது.
கிழக்கு கால்வாய் வழியாக பாயும் தண்ணீர் சோளிங்கர், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளுக்கும், மேற்கு கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீர், பேர்ணாம்பட்டு வரையிலும் உள்ள ஏரிகளுக்கு சென்றடைகிறது.
இதன் வாயிலாக, ராணிப்பேட்டை, வேலுார் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, 21,782 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கிறது. இந்நிலையில், கடந்த 2020 நவ., மாதம் பொன்னை ஆற்றில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், பொன்னை அணைக்கட்டு சேதம் அடைந்தது. இரும்பு ஷட்டர்கள் பெயர்ந்தன. அணைக்கட்டின் தரைப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த கற்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
உருக்குலைந்த அணைக்கட்டால், ஏற்கனவே வறட்சி மாவட்டமாக திகழ்ந்த ராணிபேப்டை, வேலுார் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், விவசாய பணிகள் நீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 2020 நவ., மாதம், 19.45 கோடி ரூபாய் மதிப்பில் பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், அணைக்கட்டின் ஷட்டர்கள் புதுப்பிக்கப்பட்டு, கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தடுப்பு சுவரும் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
தற்போது, ஆற்றின் மணல் பரப்பு சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் மழைக்காலத்திற்கு முன்பாகவே அணைக்கட்டு சீரமைக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து காட்பாடி கோட்ட பொதுப்பணி துறை அதிகாரி சிவசங்கரன் கூறுகையில், ''பொன்னை அணைக்கட்டு சீரமைப்பு பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. அணைக்கட்டு ஒட்டிய பகுதியில் கரைகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
''இறுதிக்கட்டமாக, ஆற்றில் மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட்டு வருகின்றன. ஓரிரு வாரங்களில் அனைத்து பணிகளும் நிறைவுபெறும். இனி பெரு வெள்ளம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதமாக, அணைக்கட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

