/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைப்பு... மீண்டும் குப்பை... 'ரிப்பீட்டு'
/
சீரமைப்பு... மீண்டும் குப்பை... 'ரிப்பீட்டு'
ADDED : செப் 26, 2024 01:19 AM

பொன்னேரி:பொன்னேரி - தச்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பெருஞ்சேரி பகுதியில், சாலையோரங்களில் இறைச்சி மற்றும் உணவு கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகிறது.
அங்குள்ள கால்வாய் முழுதும் இவை கொட்டி குவிக்கப்படுவதால், மழைநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த சில நாட்களுக்கு முன், நெடுஞ்சாலைத்துறையினர் இந்த கால்வாயை துார்வாரி சீரமைத்தனர்.
தற்போது, அதில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளதால், துார்வாரியும் பயனற்று கிடக்கிறது. மேலும், கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியை கடக்கும்போது வாகன ஓட்டிகள் முகம்சுளிக்கின்றனர்.
நாய்கள் கூட்டமும் கழிவுகளில் இரை தேடுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டபடி அங்கு சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றன.
கழிவுகளை உண்பதற்காக சாலையின் குறுக்கே சென்று வரும் நாய்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, அவ்வப்போது சிறு சிறு விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.
கழிவுகளால் மழைநீர் செல்வதில் சிக்கல், அவற்றை உண்ணவரும் நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை, துர்நாற்றம் ஆகிய பிரச்னைகள் ஏற்படுகிறது.
பெருஞ்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் உணவகங்கள் நடத்துபவர்கள், இரவு நேரங்களில் கழிவுளை கொண்டு சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.
எனவே, காவல்துறை உதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள் சாலையோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.